பூக்களுக்கும், உனக்கும்
  - சிவப்ரியன்
  பூக்களுக்கும், உனக்கும்..
--------------------------

ரோட்டோரமாய் பல முறை

ரோஜாச்செடிகள் வாங்கியதுண்டு.

ஆனால்,

எப்போதும் என் வீட்டு செடிகள்

கருத்தரிக்கும் முன்பே

மரித்துவிடும்!

எப்போதும் சண்டையிடும் உன் கோப

விழிகள்

எப்போதாவது மன்னிப்பு கேட்கும் நாள்

போல,

ஒருநாள் அதிகாலை - அது

அரிதாய் பூப்படைந்தபோது,

அன்று முழுவதும்

பண்டிகை தினமானது எனக்கு.

ஆம்

என் வீட்டு பூக்களுக்கும்,

உனக்கும் சம்பந்தம் இருக்கிறது!
வார்ப்பு
www.vaarppu.com