|
|
|
|
|
|
|
|
|
|
|
பாண்டித்துரை குறுங்கவிதைகள்
-----------------------------------------------
01.
புன்னகைளை அனுப்பிய வண்ணமாக
இருக்கிறாள்
தன்னை யாரும் கவனிக்கக் கூடுமென
வண்ணாத்திப் பூச்சியை
எட்டிப்பிடிக்க
மேலே உயரும் கைகள்
ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள
இசை பிறக்கிறது
ஆமோதிப்பதாய்
நீளும் நாவினில்
உதிக்கும் நீர் குமிழிகள்
உடைந்து சிதறுகிறது
கண் சிமிட்டலுடன்
புதிதாய் மனிதன் கடந்து செல்கிறான்
உலகம் சுற்றும் மருண்ட விழிகளுடன்
மீண்டு வருகிறாள்
இம்முறை
கால்களும் உயர்ந்த வண்ணமாய்
வண்ணாத்திப் பூச்சியை எட்டிப்பிடிக்க
02.
என் பேச்சை
செவிமடுக்க
யாரும் விரும்புவதில்லை
நான் சின்னப்பையனாம்
வாழ்வின் எதார்த்தம் புரியாதவர்கள்
அத்தகு நிலைக்கு
நானும் வரக்கூடும்
என்முன் சென்ற
யாரும் இருக்கப்போவதில்லை
அப்பொழுது.......
03.
எப்பொழுதும் நமக்குள்
ஒளிந்து கொண்டிருக்கும் உற்சாகம்
நாம்- அவ்வளவாய் கண்டுகொள்வதில்லை
நம்மை கடந்து செல்லும்
துன்பம் மட்டும்
கட்டாயப்படுத்தலால்
கொஞ்சமாய் நம்முள் ஒட்டிக்கொண்டு
முகம்முன் மொழிகிறது
விசாரிப்புகளுக்கு ஆசைப்பட்டவனாய்
நானும்.......
04.
அம்மாவிற்கும் அப்பாவிற்குமாக
விட்டுத்தராத பழக்கவழக்கங்கள்
புன்னகைகளப் புறக்கணித்து
உனக்காக காத்திருந்தது
இருவரும் ஒருவரை விரும்பி
இடப்பக்கம் வலப்பக்கமாக
இடைவெளிவிட்டுப் பயணித்தது
ஜாலிடே மச்சான் என்று
உள்ளே வெளியே
உதட்டோர புகை
புட்டி சப்தம் ஊறுகாய் என
எல்லாமுமாய் சயனித்த பொழுதுகள்
பிரியும் தருணத்தில் கண்ணீர் இருந்தாலும்
மீண்டும் சந்திப்போவல்லவா என்று
எட்டிப்பார்த்த மிச்சப்புன்னகை
மின்னஞ்சல்
தொல்லைத் தொடர்பு என கொஞ்ச காலம்
பின் எப்போதாவது
உன் ஞாபகம் இருப்பதாய்
இறந்துபோன் என்னை நானே உயிர்ப்பித்தல்
கடந்த மாதத்தில் பாபுவைப் பார்த்தேன்
என்னை அவன் பார்த்தும் பார்க்காததுமாய்
பேருந்தை விரட்டிப்பிடித்த நிமிடங்கள் மட்டும்
இதுவரை 40 முறையாவது
மறு ஒளிபரப்பாயிருக்கும்
எல்லோருக்குள்ளும் பிளவுகள்
முகுமூடியை அணிந்த வண்ணம் கடந்து செல்கிறேன்
இன்னும் மழைத்தூறல் நின்றபாடில்லை.
-பாண்டித்துரை
நன்றி : பெப்ரவரி 08 யுகமாயினி பக்கம்: 43
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|