|
|
|
|
|
|
|
|
|
|
|
இறுதி இரவும் உன்னால் விடியும்.. விளையாட்டுச் சங்கிலி
01.
இறுதி இரவும் உன்னால் விடியும்
----------------------------------------
கச்சா எண்ணையாக
பூமித்தாயின் உதிரத்தை
நித்தமும் உறிஞ்சிக் குடித்தபடியே
தீராத தாகத்தைத் தணிக்கின்றோம்
நம்முடைய சுயநலத்துக்காக
பஞ்சபூதங்களின் சமநிலையை
பலியிட்டு
சொகுசு கார்களில் ஊர்வலம்
செல்கின்றோம்
நான்கு தலைமுறைக்கு தேவையான
சொத்து நிறைந்திருக்கும்
பல கனவான்களின் வங்கிக்கணக்குகளில்
அடுத்த தலைமுறை
ஆரோக்கியமாய் சுவாசிக்க
சுத்தமான காற்று இல்லாமல்
காகித கரன்சியை வைத்து
என்ன பண்ணும்
கண நேர
அற்ப கேளிக்கைகளுக்காக
பூமியை சிவகாசி பட்டாசாய் எண்ணி
விளையாட்டாய் திரியில்
தீயை வைக்கின்றோம்
வெடிக்கும் போது தெரியும்
விளையாட்டு எப்படி
வினையாகிப் போனதென்று
இனியும் விழித்துக்கொள்ளவில்லை என்றால்
ஓர் இரவு
மனித இனத்துக்கே
விடியாமல் போய்விடுமல்லவா
இத்யாதி இத்யாதிகளிலேயே
இயந்திரமாய் நாட்களைத்
தொலைக்கும் மனிதா
இயற்கையையும் ஒரு நொடி
எண்ணிப்பார்
இறுதி இரவைக் கூட விடியவைக்க
உன்னால் முடியும்
உன்னால் மட்டுமே முடியும்.
02.
விளையாட்டுச் சங்கிலி
--------------------------
மழைநீரில் மிதந்தன
நாளைய பொறியியல் வல்லுனர்களின்
காகிதக் கப்பல்கள்
கடந்த வருட கணக்கு நோட்டுப்புத்தகங்களெல்லாம்
கப்பல்களாக வடிவம் பெற்று
வெள்ளநீரில் பயணிக்கின்றன...
கணக்கு வாத்தியாரை
ஏதோவொரு விதத்தில் பழிதீர்த்துவிட்ட
உணர்வு
அவரிடம் பிரம்படி வாங்கிய
ஒரு சில மாணவர்களுக்கு
அவர்கள் செய்யும் கணக்குகள் போலவே
‘வழி’தவறிவிடுகிறது கப்பல்
கவிழ்ந்தாலும், கரைசேராவிட்டாலும்
கன்னத்தில் கை வைதது உட்காருமளவுக்கு
எந்தக் கவலையுமில்லை அவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு
படித்துக் கொண்டிருக்கும் சிறுவன்
எல்லோருரிடமும் கெஞ்சிக் கொண்டிருந்தான்
தனக்கு கப்பல் செய்யக் கற்றுக் கொடுக்கும்படி
அவன் செய்த தொந்தரவு தாங்காமல்
அந்தக் கூட்டத்தில் ஒருவன் முன்வந்தான்
அச்சிறுவனுக்கு கற்றுக் கொடுக்க,
கப்பல் செய்வதில் முனைவர் பட்டம்
பெற்றவனைப் போல
அவனுக்கு பாலபாடம் எடுத்து முடித்தான்
கன்னி முயற்சியில் தவறவிட்டாலும்
அடுத்தடுத்து வடிவம் வெவ்வேறாக மாறினாலும்
ஓரளவுக்கு தனது பிஞசுக் கைகளால்
தானே கப்பல் செய்யக் கற்றுக்கொண்டான்
அந்தச் சிறுவன்
அவன் செய்த கப்பல்
தண்ணீரில் தத்தளித்தபடி சென்ற போது
அந்தக் கூட்டத்திற்கு மத்தியில்
அவனடைந்த ஆனந்தத்திற்கு
அளவே கிடையாது
உலகிலுள்ள ஆனந்தம் முழுவதும்
அந்தச் சிறுபாலகனின்
சேமிப்புக கணக்குகளில் நிரம்பியது
அந்த நொடிகளில்...
மழை ஓயந்துவிட்டது
ஆனால் அவனுடைய குதூகலம்
சிறிதும் குறையவில்லை
பருவம் மாறியது
கோடை காலம் வந்தது
வெயில் சுட்டெரித்தது
அனல் காற்று
புழுதி உயரெழும்ப வீசியது
இப்போது அச்சிறுவன்
பனை ஓலையில்
காற்றாடி செய்யக் கற்றுக் கொடுக்கும்படி
கெஞ்சிக் கொண்டிருந்தான்
அந்தச் சிறுவர் குழாமிடம்!
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|