|
|
|
|
|
|
|
|
|
|
|
புகழ்வழி நடப்போம் வாருங்கள்..!.. இயற்கையுடன் கூடி இருப்போம்..!
01.
புகழ்வழி நடப்போம் வாருங்கள்..!
----------------------------------------
பட்டப் படிப்பின் பின்படிப்பும்
பயில நினைத்துப் படியுங்கள்!
நட்டப் பட்டுப் பலவழியில்
நலியும் நாட்டை நினையுங்கள்!
பட்டுச் சிறகு மனந்தன்னைப்
பலவண் ணத்துக் கொடிமீது
கட்டு விரித்துக் கனிவோடும்
கரைய விடுத்துப் படியுங்கள்!
நட்டப் பட்டோம் , ஒற்றுமையில்
நாட்டம் இன்றி வாழ்ந்ததினால்!
கட்டப் பட்டோம் பிறரால்நாம்
கலந்து வாழாக் காரணத்தால்!
ஒட்டப் பெற்றோம் பின்பவரால்,
உணர்வால் பிரித்தே வைத்தாலும்
கெட்டுப் பிரிந்தே வாழ்ந்திடவோ
கேட்டுப் பெற்றோம் சுதந்திரமே?
கெட்டுப் போக நினைப்போர்க்கே
கிடைக்கும் வழிகள் எளிதினிலே!
விட்டுப் பிரியும் நினைவுகளை
விட்டுப் பிரிவோம் இன்றே!நாம் ;
கெட்டிக் கோளப் பரப்பினிலே
கீழ்மேல் என்ற நிலையேது?
தட்டிக் கொடுத்து வாழ்ந்திடுவோம்!
தட்டிப் பிரித்தல் தவிர்த்திடுவோம்!
மட்டில் மகிழ்ச்சி ஒருநாட்டு
மக்கள் என்று கொண்டிடுவோம்!
கட்டுப் பாடும், மனக்களிப்பும்
கலந்து வாழப் பயின்றிடுவோம்!
ஒட்டி உணர்ந்து பழகிடுவோம்!
ஒருதாய் மக்கள்! நிலம்,நீரைத்
தட்டில் லாதே பகிர்ந்திடுவோம்!
தடையில் வளர்ச்சி கண்டிடுவோம்!
களிப்பு மிகவே பயின்றிடுவோம் !
களைப்பு நீங்கப் பயின்றிடுவோம்!
விழிப்புக் கொண்ட பாரதத்தை
வெல்லும் வகையில் மாற்றிடுவோம்!
ஒழித்து மறைத்து வாழ்வோரை
உணர்ந்து திருந்த வைத்திடுவோம்!
பழிப்பு நீங்கி நம்நாடு
பாரிற் சிறக்க உழைத்திடுவோம்!
காழ்த்த மனங்கள் களைந்திடுவோம்!
கலந்து வாழ்ந்து காட்டிடுவோம்!
தாழ்ந்த நிலைகள் மாற்றிடுவோம் !
தரத்தில் உயர்ந்து நிலைத்திடுவோம்!
தோள்கள் நிமிர்த்தி வாழ்ந்திடுவோம்!
துரைகள் படிக்கச் செய்திடுவோம்!
வாழ்க வாழ்க எனவையம்
வாழ்த்தி நிற்க உயர்ந்திடுவோம்!
02.
இயற்கையுடன் கூடி இருப்போம்..!
-------------------------------------------
{கும்மிடிப்பூண்டியில் ஒரு புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்க ரூ,330 கோடி அனுமதி-செய்தி}
நீர்வருமப் பாதைகளைத் தூர்வாரி,
நிலம்பிடித்த பேதைகளை உடன்வாரிப்
பேரளவில் வீணாகும் மழைநீரைப்
பிடிப்பதற்கு நீர்த்தேக்கம் உருவாக்கி
ஊர்பிழைக்க வழிசெய்தால் உதவிடுவீர்!
ஒழுங்காக அதைக்காக்க முன்வருவீர்!
தேரிழுக்க வருபவர்போல் திட்டமுடன்
தேர்நிலைக்கு வருவதற்கே உதவிடுவீர்!
சீருடன்நாம் வாழ்வதற்கு நீர்வேண்டும்;
சீறிவரும் மழைநீர்க்கும் புகல்வேண்டும்!
தூரெடுக்கும் பணியினையே இலவசமாய்த்
தொடங்கிடவா யாருமுமை அழைக்கிறர்கள்!
ஏரிகளைக் காப்பதற்கே எழுந்திடுவீர்!
ஏரிகளில் வீடெடுக்க மறுத்திடுவீர்!
மாறிவருங் காலத்தை உணர்ந்திடுவீர்!
மக்களது நலமெண்ணி மாறிடுவீர்!
(வேறு)
சாக்கடைநீர் சுத்தமாக்கப் பட்ட பின்பே
சார்ந்துள்ள ஏரிகளில் கலக்க வேண்டும்!
ஊர்க்கடையில் இச்சுத்தம் செய்தல் வேண்டி
ஒழுங்கான நிலையங்கள் அமைய வேண்டும்!
போர்க்கொடிகொண் டேரிகளைப் புதுக்க வேண்டும்!
பொன்னான நீர்தேக்கிப் பொலிய வேண்டும்!
நீர்க்குறையால் அண்டைமா நிலங்கள் பக்கம்
நின்றுகை ஏந்தாதே நிமிர வேண்டும்!
(வேறு)
குப்பைகொட்டும் இடமல்ல ஏரி!
குடிவாழும் ஆதாரம் ஏரி!
‘கப்’படிக்கும் சாக்கடையா ஏரி!
கழிவுகளின் சேரிடமா ஏரி!
துப்புரவின் அடையாளம் ஏரி!
தூரெடுக்க உதவுவதும் நீதி!
இப்பொழுதே இயற்கையுடன் கூடி
இருப்பதற்குத் தொடங்கிடுவோம், நாடி!
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
கருத்துக்கள் (1)
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|