சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றியது எம் தமிழ்மூதாட்டி
சமூகத்தின் மத்தியில் நாம்
சாதிக்கேன் நீரூற்றுகிறோம் ?
ஆணெண்பதும் பெண்ணென்பதும்
அவனியின் அடிப்படை
அதைவிடுத்து அடிதடி நம்மிடையே
அவசியம்தானோ வாழ்வதற்கு
உடலில் ஓடுகின்ற உதிரத்தின்
நிறமென்ன அறிவாயோ ?
உணர்வுகளில் பசி அறியுமோ
உடலின் நிறத்தை
மனிதனாய்ப் பிறந்தோம்
மனிதனாய் வாழ்ந்தோமா ?
மனதுக்குள் பிரிவினைகள்
மண்ணுலகில் அவசியமோ ?
கனவுலகில் இல்லை ஜாதி
கவியுலகில் காணோம் பேதம்
காசுலகில் மட்டும் தான் இந்த
கண்மறைக்கும் பிரிவினைகள்
இயற்கை தன் கோரமான
இழப்புக்களைப் பரிசளிக்கும்போது
பார்ப்பதுண்டோ பேதமை உலகில்
பாவி மனிதன் மட்டும் பார்க்கின்றான்
வாழும்வரைக்கும்
கண்மூடி நாம் மறைந்து
கடைசித் தூக்கமதைத் தழுவிக்கொண்டால்
காண்போமா வேற்றுமையை
கல்லறையில் நாமும் கூறிவிடு
சாதி என்று ஏதுமில்லை நம்மிடையே
சாதிப்பதில்லை எதுவும் நிறப்பிரிவால்
சிந்தித்து செயல்படுவோம் பூமியில்
சரித்திரத்தை புனிதமாக்குவோம்
-சக்தி சக்திதாசன்
இங்கிலாந்து
===================
மழையில் நனைவதைவிட
மனித ரத்தத்தில்
அதிகம் நனைகிறது பூமி...
வன்முறை!
இரட்டைக் குவளை ஒழிந்தது
பிளாஸ்டிக் கப்...
சாதிவெறி!
நீருக்காக சண்டை
என்றோ இந்தியன் இறந்துவிட்டான்..
இனவெறி!
அரசியல் நாடகம் மக்களாட்சி
எங்கே?
பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி!
அடிமைப்பட்டுக் கிடக்கிறது
விடுதலை...
மதவாதக் கட்சிகளுக்குள்!
காணவில்லை மனிதனை...
பாதுகாப்போம்
மனிதம் வளர்த்து!
..............................
கவிஞர் சோலச்சி
அன்னவாசல், புதுக்கோட்டை,
தமிழ்நாடு.
=================
ஆரியம் வளர்த்ததுதான்
சாதியம்...
அன்றே மறைந்தது
மனிதநேயம்!
குலத்தொழில் பிரிவுகளால்
கூறுகளாயின சமுதாயம்
குலைந்தது மனிதநேயம்
விளைந்தது சாதிவெறி!
சாதிப்பிரிவை உணர்த்த
சமத்துவபுர அடையாளங்கள்...
ஓதுவோர் தம்மை உயர்த்தும்
உயர்குடியாய் அக்ரகாரங்கள்!
தீண்டாமை ஒழிப்பை
திக்கெட்டும் பரப்பிய
காந்தியின் கொள்கைகளே
தீண்டா நிலையில் இன்று!
அரசியல்வாதிகளின்
அகோரப் பசி தீர
அவர்கள் சாகுபடிதான்
சாதி வளர்ப்பு!
இப்படியே விட்டுவிட்டால்
இரண்டாயிரத்துப் பத்தில்
இரத்தவங்கியில் கேட்பார்கள்...
என்ன சாதி ரத்தம் வேண்டும்?
இன்னும் தேவையா
சாதிவெறி?
இதனை ஒழிப்பதுவே
நமது பணி!
===================
>> கிரிஜா மணாளன்
திருச்சிராப்பள்ளி, தமிழகம்.
தமிழீழமென்பது அர்த்தமற்றது
தீவான், சுன்னாகத்தான்,
பள்ளன், பறையன், கரையானென்ற
உங்களின் அடைமொழிகள்
நீங்காதவரை
- நிர்வாணி
-ருத்ரா
பிறக்கையில் பூசினார் நான்கு வர்ணம்.
இறக்கைகள் ஏதும் விரியவில்லை.
இறக்கையின் போதும் எரியவில்லை
பிறக்கையில் வந்த நான்கு வர்ணம்.
ஊர்கள் தோறும் தேர்கள் ஓடும்
உள்ளே இருப்பது புரிந்திடவில்ல.
ஊர்ந்திடும் எறும்புகளுக்கெல்லாம்
உற்சவம் அங்கு இனிப்பு மிட்டாய்.
குறுகிப்போன சிந்தனையாலே
குறுக்குச்சுவர்கள் பெருகினவே.
தர்க்கம் ஆயிரம் செய்த பின்னும
தலைகளும் ஆயிரம் உருண்டனவே.
கும்பிடவே ஓர் கடவுள் செய்தோம்
நம்பிய கல்லிலும் உயிர் வைத்தோம்
வெம்பி வெம்பிப் போயினவே
தெம்பும் இல்லை இனி கும்பிடவே.
ஆட்டுவிக்கும் அரசகுரு முதலாவது.
ஆள்கின்ற அரசன் கூட அப்புறம் தான்.
வணிகர்களெல்லாம் இங்கு மூன்றாவது.
பணிக்கும் ஏவலுக்கும் இங்கு நான்காவது
இதற்கும் கீழ் இன்னும் ஐந்தாவதாய்
பன்றிகள் நாய்கள் கூட்டங்கள் போல்
மனிதரும் இங்கு பல மிருகங்களாய்
"மனித காட்சிசாலைக்குள்"கிடக்கின்றார்
எல்லாம் ஒன்றே இரண்டல்ல
என்றவர் கூட தள்ளி நின்றார்
ஒன்றேயான சிவன்கூட அங்கே
நின்றான் தள்ளி விலகிட்டான்.
எல்லாப்பக்கமும் அவன் என்றால்
எந்தப் பக்கம் நான் ஒதுங்க?
கேட்டது தீக்குரல் எங்கணுமே
கேரளாச்சாரியார் தலைகுனிந்தார்.
அத்வதைங்கள் அப்படியே இருக்க
அர்த்தம் புரிந்தவர் பாஷ்யம் எழுதினர்.
அனர்த்தங்ககளே இங்கு அர்த்தம் ஆனதால்
அடங்கிக்கிடந்தவர் அமுங்கியே கிடந்தார்.
துவைதமே உயர்ந்ததென ஸ்லோகங்கள்
தூக்கிப்பிடித்தன ஓர் கொடியை..அது
நான்கு வர்ணக்கொடியே தான்..இந்
நாட்டை ஆண்டது சாதிகள் தான்.
நாராயணனே முக்தி வடிவம் என
நாடு தோறும் ஒலிக்கட்டும்..இதில்
நரகம் எனக்கு கிடைத்தாலும்..இதோ
நவில்கிறேன் உண்மை கேட்டிடுவீர்.
நான்கு சாதிச் சுவர் கட்டி..அந்த
நாராயணனை மறைப்பதெலாம்
மோசடிவேலை அறிந்திடுவீர்..இனி
மோட்சம் பெறுவீர் புது ஞானத்தில்.
என்றவர் சொல்லிசென்றவர் தான்.
இன்றும் ஒலித்திட கேட்கின்றோம்.
நரகத்தில் வீழ்ந்தது புது ஞானம் தான்
சாதிப்பூதம் இன்னும் சாகவில்லை
இருப்பினும் இன்னும் பார்க்கின்றோம்..சாதி
நெருப்புகள் இன்னும் அணையவில்லை.
மடங்கள் மட்டும் பெருகினவே..வெறித்
தடங்கள் யாவும் மறையலையே.
எல்லாம் ஒன்றல்ல இரண்டென்றார்
கடவுள் வேறு மனிதன் வேறு
பக்தி நூலால் இணைந்திடவே
பஜனை ஒன்றே வழியென்றார்.
" நூல்" போட்டவர் மட்டுமே
உயர்ந்து உயர்ந்து போய்விட்டார்.
கடவுள்கள் கூட இங்கே வெறும்
கல்லாய் நின்று தவிக்கின்றார்.
புரிநூல் புரிந்தவர் எல்லாரும்.."அவனை"
புரிந்தவர் ஆகார் புரிதிந்டுவீர்...முப்
புரிநூல் பூண்டவர் மட்டும் தான்
புண்ணியர் ஆண்டவர் பிள்ளைகள்.
புல்லாய் பூண்டாய் மற்றவர்கள்
புழுதியில் கிடப்பதே விதியென்று
புருஷ சூக்தம் சொல்கின்றார்..இது
வருஷங்கள் ஆயிரம் நீண்டசிறை.
புருஷோத்தமன் கூட இவர்களுக்கு
புலப்படாத புகை மூட்டம்.."அவன்"
விசுவரூபங்கள் அத்தனையும் சாதி
விஷமம் காட்டும் காட்சிகளே.
சூலமும்.சங்கு சக்கரமும்...சாதிச்
சூழ்ச்சிகள் முன்னே புஸ்வாணம்.
இறைவனைத் தமிழில் வழிபட்டால்
இறைவனும் தீண்டத்தகாதவனாம்.
ருத்ர தாண்டவ சிவனோ அங்கே
பத்திரமாக இருக்கின்றான்..இந்த
பொ(ய்)ம்மையாட்டமே திரைமூடி
பொல்லா மதமாய் ஆனதுவே.
சிதம்பர ரகசியம் இதுவேதான்.
சித்தர்கள் சொன்னதும் இதுவே தான்.
இறைவன் என்று எதுவுமில்லை..அங்கு
இரைந்து கிடப்பதோ வெட்ட வெளி.
தீட்சதர் கூட்டம் தின்றது போக..அங்கே
எஞ்சிக்கிடப்பது எலும்புக்கூடு..ஆம்
சிவனின் வெற்று எலும்புக்கூடு...அந்த
சில்லறைக்கூச்சலே வேதப்பாட்டுகள்.
வானம் வழியே மொழிபேசி
வந்தவன் அவனே உயர் கடவுள்.
உங்களுக்கு அவனோ புரிய மாட்டான்.
எங்கள் மூலமே அவன் பேசுகின்றான்.
அவன் வழிவந்தவர் மட்டும்தான்
உயர் இனமாக நின்றிடுவார்.
மற்றவர் எல்லாம் அவர் பின்னே.
மண்டியிட்டுக் கிடந்திடுவீர்.
இதுவே சிறந்த தத்துவமாம்..என
ஓதி நின்றது சிறுகூட்டம்.
பீதி கொண்டு பிய்ந்ததனாலே
ஒதுங்கிப்போனது பெருங்கூட்டம்
வாள்மொழி பேசும் அரசனிடம்
வாய் மொழி மந்திரம் செல்லவில்லை.
வாளும் வாயும் கூட்டணி சேர்ந்து
வகையாய் சட்டம் செய்தனவே.
வாயில்லாத பெருங்கூட்டம்
அறிவுக்கண்ணை திறந்திட்டால்
அழிவு அந்த கூட்டணிக்கே..அதனால்
நான்கு மறையும் திரையாச்சு.
நான் முகனும் நா செத்தான்.
புலித்தோல் பூண்ட பூரணனும்
பூனை போல ஒளிந்து கொண்டான்
அரியும் அறியா துயில் கிடந்தான்.
கோவிலில் கேட்கும் மேளங்களில்..சாதி
வேதாளங்களே எதிரொலிக்கும்.
சாதிப்பூதம் பெரும்பூதம்...அதில்
ஐம்பெரும்பூதமும் நடு நடுங்கும்.
சூலமும் சங்கு சக்கரமும்...சாதிச்
சூழ்ச்சிகள் முன்னே புஸ்வாணம்.
இறைவனைத் தமிழில் வழிபட்டால்
இறைவனும் தீண்டத்தகாதவனாம்.
ருத்ர தாண்டவ சிவனோ அங்கே
பத்திரமாக இருக்கின்றான்..இந்த
பொ(ய்)ம்மையாட்டமே திரைமூடி
பொல்லா மதமாய் ஆனதுவே.
சிதம்பர ரகசியம் இதுவேதான்.
சித்தர்கள் சொன்னதும் இதுவே தான்.
இறைவன் என்று எதுவுமில்லை..அங்கு
இரைந்து கிடப்பதோ வெட்ட வெளி.
தீட்சதர் கூட்டம் தின்றது போக..அங்கே
எஞ்சிக்கிடப்பது எலும்புக்கூடு..ஆம்
சிவனின் வெற்று எலும்புக்கூடு...அந்த
சில்லறைக்கூச்சலே வேதப்பாட்டுகள்.
ஆதிக்க சாதி அன்றொரு நாள்
அடிமைச்சாதியை தீ வைத்து
பொசுக்கிய போது அக்கினி பூதம்
பொசுக்கென வந்து அணைக்கவில்லை.
ஆயிரம் ஆயிரம் நிலமுழுது
ஆண்டவனுக்கு அமுது தந்த
உழுதவன் நிலமெலாம் பறித்திட்டார்
உரிமைகள் இல்லை உழவனுக்கு.
நிலம் எனும் பூதமோ நிலத்துள்ளே
நீள்துயில் கொண்டு புதைந்ததவே
நிமிர்ந்திடும் ஒரு நாள் பூகம்பம்..எனும்
நெட்டைக்கனவுக்கு பஞ்சமில்லை.
ஊர்க்கிணறு கூட தண்ணீரை மறுக்கிறது.
உயர்சாதியின் தீண்டாமைக் கொடுமைஇது.
தண்ணீர்ப்பூதமோ நீதி கேட்கவரவில்லை.
தட்டிக்கேட்கவோ பிரளயங்கள் வரவில்லை.
பண்படுத்த மதங்கள் வந்ததென்றால்
புண்படுத்தும் சாதி வர்ணங்களேன்?
பக்தியும் அன்பும் மதங்களென்றால்
பயங்கர ஆயுதங்கள் கடவுளுக்கேன்?
குறுகிப்போன சிந்தனையால்
குறுக்குச்சுவர்கள் பெருகினவே.
தர்க்கம் ஆயிரம் செய்த பின்னும்
தலைகளும் ஆயிரம் உருண்டனவே!
வெறிகள் வளர்க்கும் மதங்களினால்
தறிகள் கெட்டு தடம் புரண்டான்.
நெறிகள் மறந்தான் மிருகங்களாய்.
குறிக்கோள் எல்லாம் கொலைவெறிதான்.
குலம் கோத்திர சாக்கடையில்
குளித்துக்கிடந்தது போதும் நீ.
எருமைவர்க்கம் நீயல்ல...இந்த
எருக்கமும் பூக்கும் எரிமலைகள்.
மானுடம் என்னும் ஊழித்தீ இந்த
மக்கிய சாதி மதம் யாவும்
அழித்திடும் பெருந்தீ ஆகட்டும்.
ஒழிந்திட வேண்டும் சாதிமதம்.
மதச்சார்புகள் வேண்டாம் இனி
பொதுச்சார்பு எனும் விஞ்ஞான்ம்
போதும் போதும் எஞ்ஞான்றும்.
போதனை செய்தது ஐன்ஸ்டீன்தான்.
பிண்டமாய் இருந்தது எல்லாமே..சக்திப்
பிழம்பாய் மாறும் ஒரு கணத்தில்.
ஒளியின் வேகம் உனக்கிருந்தால்
ஒழிந்துபோகும் "சடத்துவமே"
அண்டம் பிளக்கும் அணுஆற்றல்
அங்கே பிறந்திடும் அறிந்திடுவாய்....தின்
பண்டம் கேட்கும் சாதிமதம்..அதன்
பிண்டம் ஆகிச் சாகாதே..
விஞ்ஞானமே உன் வேட்கை
விளங்கிடும் எல்லா மாயங்களும்.
மதநல் லிணக்கம் வேண்டுமென்று..
உன் மடிநிறைய பூதங்களா?.
வேண்டுதல் வேண்டாமை இல்லாமல்
வேண்டிக்கேட்கிறேன் மானிடனே
எம்மதமும் சம்மதம் எனக்கில்லை..என
எழுச்சியுடனே சிந்தனை செய்.
வேண்டாம் வேண்டாம் மதம் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் சாதிகளும்.
வேண்டாம் வேண்டாம் வெறி வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் பகை வேண்டாம்
===================================
ருத்ரா
------------------------------
கருப்பைக் குறைவாக நினைப்பதும்,
பிறப்பைக் கேவலமாய்ப் பார்ப்பதும்,
தேறாத மனங்களில் நஞ்சாகிப் போன
ஆறாவது அறிவின் அடையாளம்.
உடுத்துவது கருப்பில் வேண்டும்,
உச்சிமுடி கருப்பில் வேண்டும்,
வணங்கிடும் இறைவன் கருப்பில் - உடன்
வாழ்ந்திடுவோர் கருப்பில் வேண்டாமோ?
உழுபவனின் விளைச்சல் வேண்டும்.
பழுது பார்க்கப் பாட்டாளி வேண்டும்
பக்கத்தில் வந்து நிற்க மட்டும்
பாழாய்ப் போன சாதியால் வேண்டாமோ?
-சித. அருணாசலம்.
சிங்கப்பூர்.
நிறவெறி சாதிவெறி
என
நிறைய வெறிகள் இருந்தாலும் மனிதாபிமானவெறி
மட்டும் இருந்தால்தான்
நீ
மனிதன்...!
>செண்பக ஜெகதீசன்...
மனுஷனாக
வாழ்வதற்கே சமயங்கள்
மனிதனின்
விருப்பத்திற்கும்
அறிவுக்கும் தக்கவாறு
கொள்கைகளில் நேசங்கள்
நேசக்கரங்களில்
நேர்த்தியாய் செய்யப்பட்ட
அரிவாள் எதற்க்கு…?
அறுக்கப்படுவது பயிர்களா
மனித உயிர்களா…!
அறிவாள் தீர்கப்படவேண்டிய
பிரச்சனைகளை
அரிவாளால்
தீர்த்துக்கட்டப்படுதேன்…!
கருவறையின்
இரகசியத்தை
நம் காதுகள் கேட்பது
எப்போது…?
மழைப் பொழிந்து
அணையில் தேங்கி
நதிகளில் கலந்து
ஆறுகளில் பாய்ந்து
சங்கமிக்கின்றன சமுத்திரத்தில்
அதில்
அணை எங்கே
ஆறு எங்கே
நதி எங்கே…?
இவைகள்
நீரை சமுத்திரத்தில்
சேர்க்கும் வழிகள்
எந்த அணையிலிருந்து
வந்தோம்
எந்த நதியில் இணைந்தோம்
எந்த ஆற்றில் பிரிந்தோம்
என்பதெல்லாம்
சமுத்திரத்தில் கலந்த
நீருக்கு தெரியுமா…?
மமதையர்களின் ஆசைக்கு
மனிதர்கள் பலிஆடா…?
கோவிலும்
பள்ளிவாசலும்
மாதாகோவிலும்
புனிதமாக வழிபாடு செய்யும் போது
ஆறுமுகமும்
அப்துல்லாஹ்வும்
ஆல்பர்ட்டும்
மனிதத்தை மறந்தவர்களா…?
ஆறுமுகம் அறுவடைசெய்வது
அப்துல்லாஹ்வின் வயல்
ஆல்பர்ட் நிறுவனத்தில்
அப்துல்லாஹ் மேலாளர்
மதங்களை மறந்த
இவர்களுக்குள் வளர்வது
மதநல்லிணக்கமல்ல
மனிதநல்லினம்
தூய்மையான
இவர்களுக்கு மத்தியில்
துவைதத்தை தூவியது
யார்…?
அரசியல் என்ற
வியாபாரச் சந்தையில்
மதங்களும் மார்க்கங்களும்
விற்;பனைப் பொருள்கள்
சந்தை பரபரக்க விந்தைசெய்து
பரபக்கத்தை (பிறர்மதத்தை)
சூடுபடுத்தி குளிர்காயும்
சூத்திரக்காரர்கள்
அரசியல்வாதிகள்
பிள்ளையைக் கிள்ளிவிட்டு
தொட்டிலை ஆட்டுவதுப் போல்
கட்டும் மேம்பாலங்களிலும்
கடக்கும் சாலைகளிலும்
நடக்கும் பாதைகளிலும்
மதநல்லிணக்கம் என்றபெயரில்
பெயர்தாங்கி நிற்க்கின்றார்கள்
மறைந்த பல சமுதாய மனிதர்கள்
சாலைகளில் மதநல்லிணக்கத்தை
காண்பதை விட்டு
அரசியலில்
மதமற்ற மனிதர்களை
தேடுவோம்….
மனிதநேய உணர்வில்
அரசியல் வாழ்ந்தால்
ஆறுமுகத்தின் மகள்
அப்துல்லாஹ்வின்
மருமகள்
ஆல்பர்ட்டின் மகன்
ஆறுமுகத்திற்கு
மருமகன்…!
-கிளியனூர் இஸ்மத், துபாய்..
சாதி என்ற சாக்கடையிற்
சறுக்கி விழுந்த சமுதாயம்
மீறி என்று வெளிவருமோ?
மேதினி தானும் உய்வுறுமோ?
அப்பன் பாட்டன் காலத்தில்
அடிதடி சண்டை பிடித்ததெல்லாம்
இப்போதுந்தான் தொடர்வது தான்
இன்னும் வருத்தந் தருகிறது.
அன்பு பண்பு பாசத்தை
அகத்தில் வைப்போம் , நேசிப்போம்
என்றும் ஒற்றுமை யாசிப்போம்
எல்லோரும் சமம் என்றிடுவோம்
சியானி
அச்சுவேலி
சக மனிதனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
சாக்கடை அலசும் சாதாரன
மனிதனோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
மடியேந்துபவனுக்கு மாடியில் நின்று எச்சில்குட துப்பாத
சாதனை மனிதனோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
நிறத்தில் பிரித்து மனிதாபிமானத்தை பார்க்கும் இந்த சமுதாயத்தை
எந்த நிறம் கொண்டு மறைப்பது !
கணிப்பொறி உலகில்
இன்னும் ஜாதி புத்தகத்தை
சில புரட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!!!
இந்த வெண்ணிலவு அவர்கள்
வீடுகளை மட்டும் இருளை வீசுகிறதா !!
இந்த சமுதாயர்த்துக்கு
விடியலுக்காக விளக்காக வா நாம் ஒளிவீசலாம்
-வேலு
போளூர் வட்டம், திருவண்ணாமலை
