en paathai
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-15 00:00

விட்டுவிடுதலையாகி...!
* செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

என்னைப் பின்தொடர்வதில்
உனக்கெதுவும் கிடைக்கப்போவதில்லை.
என்னைப் புறந்தள்ளுவதாலும்
பெரிதாய் நிகழப்போவதொன்றுமில்லை.
சேர்ந்தே என்னோடு நீ வருவதிலும்
சிறிதளவும் எனக்கு சம்மதமில்லை.

விட்டுவிடுதலையாகிப் போ
உன் சிறகுகள் செல்லுமிடமெங்கும்.

ஆகக்கூடி வரும் ஒரு ஊழிக்காலத்தில்
சந்திப்போம் _ நமது
அன்பின் வலிமையைச் சொல்ல.


15.09.2008

- செல்வராஜ் ஜெகதீசன், 2008-09-15
என் பாதையும் பயணமும்...

பாதை மாறிய பெற்றோர்..
பாதியில் நிற்குது
என்
பாதையும் பயணமும்...!

- செண்பக ஜெகதீசன்

- செண்பக ஜெகதீசன், 2008-09-15
இரப்பர் தடம்பதித்து பயணம் செய்பவர்கள்
அறிவதில்லை
வெற்றுக்கால்களின் நடையை!
அங்கே
பூமிக்கும் பாதத்துக்குமிடையே
செருப்புத்தரகர்கள் இல்லை.
யாரோ உருவாக்கிவைத்த
வழித்தடங்களைத்
தேடாத பாதங்களே
தம்பாதைகளை சுயமாய்
தாமே தெரிவு செய்கின்றன என்பதுவும்.

---------------
கருவறை ஆதியாம் கல்லறை ஈறாம்
ஒருவழிப் பாதையே வாழ்வும்-அருளும் அறிவும் சிலருக்(கு)அமைவ(து)எனிலோ பெரிதும் மனிதப் பிழை!

- இப்னு ஹம்துன்

- இப்னு ஹம்துன் , 2008-09-15
என் பாதையும், பயணமும்.
========================

தினம் தினம் என்னைச்
சுட்டெரிக்கிறது
வீணாகப் பழி சுமத்தி,
இந்த சமுதாயப் பாதை.
விடாமுயற்சியில்
ஒவ்வொரு நொடியும்
உயர்ந்து முன்னேறிச் செல்கிறது
எனது பயணம்.

-----------------------------------
கல்லாகக் கிடந்தது என்
வாழ்க்கைப்பாதை.
தேவையில்லா சிறு சிறு
துன்பங்களை
சிதைத்தெறிந்து,
சிற்பமாய் மாற்றியது
என் சிறிய கல்வி உளியின்
பயணம்.

- தே. ரம்யா
கொட்டக்குளம், திருவண்ணாமலை
தமிழ்நாடு.

- தே. ரம்யா, 2008-09-15
என் பாதையும் பயணமும்
=======================
எத்தனையோ பேர்
என் வாழ்க்கைப் பாதையில்
கல்லும், முள்ளும் பரப்பி
கனவிலிருந்தார்கள் நான்
காணாமற் போய்விடுவேனென்று.

எதிரிகளை இனங்காணும்
இரகசியமும்
எத்தர்களை சமாளிக்கும்
இலக்கணமும்
எனக்கு போதித்தது
என் தன்னம்பிக்கைக் கல்வி.

தொடர்ந்தேன் என் பயணத்தை
தோள்களில் நம்பிக்கையைச் சுமந்து.
வெற்றிப் பயணம் தொடர்கிறது,
வீணர்களின் கனவைச் சிதறடித்து!

- கிரிஜா மணாளன்
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.

- கிரிஜா மணாளன், 2008-09-15
என் பாதையும் பயணமும்…

கருவறையை
பிரிந்த பொழுது
நான் அழுதேன்…
பள்ளிக்கு அனுப்பி விட்டு
தாய் அழுதாள்…

கல்லூரி படிப்பு முடிந்து
நாங்கள் அழுதோம்…

காதலை பிரிந்து
காதலர்கள் அழுகிறார்கள்…

கணவனை பிரியும் பொழுது
மனைவி அழுகிறாள்…

உயிர் பிரியும் பொழுது
உறவு அழுகிறது…

பிரிவு என்பது
காலமும் தூரமும்
செய்த நிர்ணயம்…

எண்ணத்திலும்
உள்ளத்திலும்;
நினைவு
வாழுகின்ற பொழுது
எது பிரிந்தது… ?

உடல்
காற்று ஊதப்பட்ட
பந்து- அது
ஆன்மாவால்
அலங்கரித்துக்-
கொண்டிருக்கிறது.

எங்கிருந்து
புறப்பட்டோமோ
அங்கே
சேர வேண்டுமென்பது
நியதி…!

-கிளியனூர் இஸ்மத் துபாய்

www.kiliyanur-ismath.blogspot.com

- கிளியனூர் இஸ்மத் , 2008-09-16
பாதணியின்றி கடந்து வந்த பயணம்.
பதித்த கால்களில் வடுக்கள். படும் வேதனையை
பகிர்ந்து கொண்டு, பாழும் வயிற்றுக்காக
தகிக்கும் வெயிலில் நிற்கிறேன்!

-வை.அண்ணாசாமி-

- வை.அண்ணாசாமி, 2008-09-16
குறிப்பு: இந்த கவிதை புகைப்பட குழந்தை பேசுவதாய் செய்த கற்பனை.

என் பாதையும் என் பயணமும்
---------------------------

எங்கே என் பாதை
எங்கே என் பயணம்
எனக்கே ஒன்றும் புரியவில்லை
எட்டிய தூரம் நோக்குகிறேன்
பாதை எதுவும் தெரியவில்லை

அடுத்து உடுத்த ஆடை இல்லை
அழைத்துக் கேட்க ஆளும் இல்லை
இலக்கு எதுவும் எனக்கு இல்லை
வாழ்கை கணக்கு எதுவும்
எனக்கு இல்லை

பட்டினி மயக்கத்தில்
பல நாட்கள்
பாதை உறக்கத்தில்
சில நாட்கள்
என்ன ஆகுமோ
வரும் நாட்கள்

தடம் மாறிய பாதை
இடம் மாறிய உறவு
எங்கே தொடங்கினேன்
எங்கே முடிவேன்
விடை யாருக்கும்
இங்கே தெரியவில்லை.

- ராஜா கமல்

- ராஜா கமல், 2008-09-17
எனது பாதையும் பயணமும்
-------------------------

எங்கே தொடங்கியது ?
என் பயணம்
எங்கே முடியும் ?
இந்தப் பயணம்

பாதையும் தெரியாமல்
பயணமும் புரியாமல்
மயங்கிய மனதுடன் ஒரு
மழலையின் தயக்கம்!

உலகத்தின் அவசரம்
யுத்தத்தில் பிறக்கும்
சத்தத்தின் சங்கீதமும்
மனிதனை மனிதன் உலக்கி
மண்ணைப் பெருக்கி அதனால்
தன்னை வளர்ப்பதே !

இல்லாத எதிர்க்காலத்தைச்
சல்லடை போட்டுத் தேடும்
உன் சின்னக் கண்களில்
உருளின் கண்ணீர்த்துளிகளின்
உண்மை எடையை
உணர்ந்தவர் இங்கே யாரடா?

ஆதவன் கதிர்கள்
சுட்டெரிக்கும் ஓருபுறம்
தன்னுள் வாங்கிய சூட்டை
தணிக்கிறது தரை அவன் பாதங்களை
தகித்தே !

கண்களில் தெரியும் ஏக்கம்
காட்டுது வாழும் ஆசையை
கால்களில் தோன்றும் தயக்கம்
காட்டுது பயணத்தின் வெறுமையை

ஆயினும் என்ன ?

உலகில் இன்னமும்
சேர்ப்பவன்
சேர்த்துக் கொண்டே
அழிப்பவன்
அழித்துக் கொண்டே
அழுபவன்
அழுதுகொண்டே

எங்கே பாதை?
எங்கே பயணம்?
தெரிந்தவர் சொல்லுங்கள்
குழந்தையின் பயணம்
தொடர

-சக்தி சக்திதாசன்

- சக்தி சக்திதாசன், 2008-09-21
என் பாதையும் என் பயணமும்
----------------------------

அதிகாலைப் பயணம்.
ஜன்னலுக்கு வெளியே தூரத்தில்
கையசைக்கும் குழந்தைகள்.
நொடிப்பொழுதில் நானும்
குழந்தையாய் மாறி,
கையசைக்க நினைத்து,
சுற்றம் பார்த்து,
முற்றும் உறைந்து,
பார்வையையே பதிலக்கி
உள்ளே சகலமும்
முடங்கிப் போன
நான்

-துரை.ந.உ தூத்துக்குடி

- துரை.ந.உ தூத்துக்குடி, 2008-09-21
என் பாதையும் என் பயணமும்.
============================

பாருலகில் பயணம் செய்யப்
பாதைகள் பலவுண்டு.
எளிதான பாதையை இப்போதே
நான் தேர்ந்தெடுத்தேன்.
பாதை கடினமெனினும்
பார்வை ஒன்றே.
முள் நிறைந்த பாதையெனினும்
முள்ளகற்றிச் சென்றிடுவேன்,
தொல்லைதரும் பாதையெனினும்
துயரகற்றிச் சென்றிடுவேன்,
முன்னேறும் வழியென்பதால்
முழு முயற்சி செய்கின்றேன்.
முழுதான பாதையென்பதால்
முடிவினிலே பெறுவேன் வெற்றி!
நல்மனங்கள் துணையானால்
நானிலத்தில் பெறுவேன் வெற்றி!
நற்றொண்டுகள் பலவாற்றி
நம் மாநிலத்தை உயர்த்திடுவேன்!
பாதை இனிதாகையால் என்
பயணமும் இனி இனிதாகும்!

- கவிஞர் அ. கௌதமன்
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.

- அ. கௌதமன், 2008-10-05
தியாகச்சுவடுகள் பதிந்த
தேசியப் பாதையில்
திடமுடன் என் கால்களின்
பயணம்.

இளைஞனாயிருந்து
இன்றைய முதுநிலைவரை,
என் பயணத்துக்கு வழிகாட்டியாய்
இந்திய தேசிய உணர்வு!

இந்தியா என் தேசமென்ற
இதய உணர்வோடு,
சாதிமத பேதமின்றி
சங்கமிக்கும்
சகோதரர்கள் துணையோடு,
எதிர்கால இந்தியாவின்
எண்ணற்ற கனவுகளைச் சுமந்து...
என் பயணம் தொடர்கிறது!

- கிரிஜா மணாளன்
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.

- கிரிஜா மணாளன், 2008-10-08
விபச்சாரத்தின் எதிரொலி

எல்லோரையும் போல
எடுப்பாய்த் துணியுடுத்தி
கெளரவமாய்த் தலைநிமிர்ந்து
கைவீசி நடக்க முடியாத
என் பாதையையும்
அதன் பயணத்தையும்
வெறுப்பதைத் தவிர
வேறேன்ன செய்ய முடியும் என்னால்.

சித. அருணாசலம்,
சிங்கப்பூர்.

- சித. அருணாசலம், 2008-10-17
என் பாதையும் பயணமும் !
---------------------------
என் பயணப் பாதையில்
இருப்பிடங்கள் அழிந்து
மண்ணும் உருக்குலைந்து
அடையாளம் அற்றதோர்
பாலைவனமாக மாற்றிவரும்
இரும்புக் கழுகுகளின்
அரக்கக் குண்டுகளின்
அகோரப் பாய்ச்சலில்
அன்னையுடன் தந்தையையும்
பறிகொடுத்துவிட்டு
அதோ அங்கே தெரிகின்ற
ஒளிவீசும் முகம் கொண்ட
தாயகனின் அரவணைப்பில்
என் தொடர் பயணத்தை
தொடரும் நம்பிக்கையில்
நான் மட்டுமல்ல
இன்னும் என்னைப்போல் பலராக
சிறுவர்களும் சிறுமியரும்
தாயகப் பெருவெளியில்
உறுதியோடு பயணிக்கும்
நம்பிக்கையில்
எம் எதிர்காலச் சந்தி - ஆனால்
எல்லா வசதிகளோடும்
உயிர்ப் பயமற்ற போதும்
நீயேன் நம்பிக்கையற்றவனாய்
என்று கேட்கின்றது அடுத்த தலைமுறை !

இவ்வண்ணம்
மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி
06.11.2008

- மா.பாஸ்கரன், 2008-11-07
என் பாதையும் பயணமும்...

சின்னக் குழைந்தாய் ஏன்வந்தே-இங்கு
சிலைபோல் காணும் நிலைதந்தே
கன்னம் பாதி மறைந்திடவும-சோகம்
கண்களில் நன்கே நிறைந்திடவும
தன்னம் தனியே உனைக்காண-மேலும்
தவிப்பும் பயமும் முகம்பூண
என்னுள் நினைவுகள் தாக்கியதே-இதயம்
ஈழம் தன்னை நோக்கியதே

காலில் உனக்கோ செருப்பில்லை-அங்கே
காலொடு கையும் தோளுமில்லை
நாளும் அழிந்தது நமினமே-இங்கே
நம்மைப் பழித்திட நம்மனமே
தோலில் சுரணை வரவில்லை-இந்திய
தேசப் பற்றாம் புரியவில்லை
பாலில் வற்றிய அன்னைதான்-உலகு
பார்க்கும் பாவச் சின்னந்தான்

தலைமேல் உனக்கு முக்காடே-ஈழத்
தமிழர் வாழிடம் சடுகாடே
அலைபோல் அலைந்து உதைபட்டும்-அவன்
அழிய சதைகள் கிழிபட்டும்
கலையாத் தூக்கம் இந்நாட்டில்-கண்டு
காறித் துப்ப வெளிநாட்டில்
நிலையாய் பெற்றோம் பழியேதான்-அது
நீங்கக் காணபோம் வழியேதான்

மடிந்தவர் போக மற்றவரும-தம்
மனதில் அமைதி அற்றவராய்
விடிந்தால் என்ன நடக்குமெனும்-பெரும்
வேதனை தன்னில் மூழகிமனம்
முள்ளின் வேலி தனிலுள்ளே-அந்தோ
முடங்கிக் கிடப்பார் நிலைசொல்ல
சொல்லில் அடங்கும் ஒன்றல்ல-எடுத்து
சொல்ல நடந்ததுநடப்பது ஒன்றல்ல

கதறி அழுதும் வரவில்லை-ஏன
கண்ணீர் அவரக்கே கண்ணில்லை
பதறி துடித்தும் ஒலியில்லை-ஈனப்
படைகள் கேட்பின் வரும்தொல்லை
சிதறி ஓடிமறைந தாலும்-அதை
சிங்கள வெறியர் அறிந்தாலும்
குதறி அழிக்க வருவாரே-இந்த
கொடுமை தீர்பார் இனியாரே

புலவர் சா இராமாநுசம் அரங்கராசபுரம்
சென்னை 24

- புலவர் சா இராமாநுசம், 2011-03-03
என் பாதையும் என் பயணமும்

இலக்கு நோக்கிய
என் பயணத்தில்
பாதை தெரியாமல்..
பலநாட்கள்..

இடறி விழுந்து
தடம் மாறி
சில நாட்கள்..

முட்டி முளைக்கின்ற போதெல்லாம்
கிள்ளி எரிகின்ற விரல்கள்..

எங்கே தொலைந்து போவேனோ
என்ற அச்சத்திலேயே..
போராடி போராடி
புதிய பாதை தேடி-மீண்டும்
இலக்கு நோக்கிய பயணம்..

பாதையும் முடியவில்லை
பயணமும் முடியவில்லை
களைபினூடே திரும்பிபார்கிறபோதுதான்
உணர்கிறேன்..
வாழ்வில் பாதி முடிந்திருப்பதை

மீதி வாழ்க்கையை
எப்படி வாழ்வது...
மீண்டும் தொடர்கிறது
என் பயணம்..
அதற்கான இலக்கோடு!

பாரதிமோகன்

- பாரதிமோகன், 2011-03-03

Share with others