எனது செல்லமே..
உன்வாழ்க்கையை
இப்படித்தான் வாழவேண்டும்
என்ற வரையறைக்குள் உன்னைத்
தள்ள எனக்கு இத்துளி சம்மதமும் இல்லை
ஆனாலும்
ஒரு தாயாக உன்னை கடைசிவரை
மனிதாபிமானமுள்ள ஒரு
"மனிதமாகவே" பார்க்க ஆசைப்படுகிறேன்
மயூரி
மகன் பிறப்பு குறித்து
நண்பன் ஒருவன்
உதிர்த்த வாசகம்
"எப்படி இருக்கிறது
நீ படைத்த
கவிதை?"
வாகாய்க் கவிதை செய்ய
வார்த்தைகளோடு
வதைபடும்
மாயமான்
விளையாட்டுகளின்றி
இருக்கவேண்டுமே
இவன் வாழ்வாவது
என்றிருந்தது
எனக்கு.
செல்வராஜ் ஜெகதீசன்
உயிர் ஒன்று
ஜனிக்கும் நொடியில்
துடிக்கத் தொடங்குகிறது
அதன் மரண கடிகாரம்!
ஜனா கே
நண்பருக்கு
குழந்தை பிறந்திருப்பதையறிந்து
வாழ்த்துச்சொல்ல கிளம்பினேன்.
பனிக்காலையில் பூத்தமலர்
போல உறங்கிக்கொண்டிருந்த
குழந்தையை கொஞ்சநேரம்
ரசித்துவிட்டு நண்பருடன்
பேசிக்கொண்டிருந்தேன்.
நல்ல ஸ்கூல்
கிடைக்கவேண்டுமென்று
கவலைப்பட்டார் என்னிடம்.
என்.விநாயக முருகன்
அருவாக இருந்த என்னை
கருவாக -
உருச் சுமந்து
உயிர் சுவாசம் தந்தவளே...
என் பிறப்பு
உன்னின்
மறுஜென்மம்மாமே...
சொல்
அல்லது செய்.
பாலூட்டும் ஒவ்வொரு வேளையும்
பக்குவமாய் ஊட்டி விடு
உன் -
எண்ணங்களையும்
கனவுகளையும்.
கண்ணீர் தவிர்
தாயே....
உணர்வுகள் மெய்பட
காத்திரு.
உன் -
கவலைகள் அழிக்கும்
என் கரம்
சற்று நீளும் வர.
மதுக்கூர் சர் மதிநா,
துபாய்.
வந்தாரை வாழ்விக்கும்
வன்னி வரலாற்றுச்
செந்தேன் தமிழ் மணக்கும்
செம்மலை யிற் பிறந்து
கம்பிக் கூடடைத்த
காக்கியுடைக் காவலுக்குள்
உயிரைப் பிடித்து வைத்து
உற்றாரையுந் தொலைத்து
வறுமையின் பிடியிற்குள்
வயிற்றுப் பசியோ டிருக்க
அங்கமென விந்த
அகதி முகாமிற்குள்
திங்களொரு பத்திந்தத்
தாய் வயிற்றிற் காத்திருந்து
தங்க மகனே நீ
தவறி வந்து ஏன் பிறந்தாய்?
முள்ளி வாய்க்காலில் - உனக்கு
மூத்தவரை மட்டுமல்ல
அள்ளி அணைத்தெடுக்கும் - உன்
அப்பனையும் தானிழந்து
கள்ளிச் செடியாகத்
தனித்திருந்த எந்தனுக்கு
கொள்ளி வைக்க என்று வந்த
குலவிளக்கு நீ தானோ?
துவக்குகளின் வேலிக்குள் - உன்னைத்
தூங்க வைக்க நான் பாடும்
தாலாட்டு ஓசை இந்தத்
தரணியெங்கும் கேட்டிடுமா?
உயிரோடு உறவு தனை
ஓர் நாளில் தொலைத்து விட்டு
வேரிழந்த என் வாழ்வில்
விழுதெறிந்த உன் பிறப்பு
பேராக நான் வாழ்ந்த - என்
பிறந்த இடம் சேர்க்காதா?
சியாமினி இராசரத்தினம்
முட்டையில் வெளியாகும் குஞ்சு,
மொட்டு விரியும் மலர்,
வெட்டி அடித்த நெல்மணி, குத்தி உமி நீங்கிய அரிசி,
முத்து முத்தான மழலைகள்
எத்தனை எத்தனை பிறப்புகள்!
படைப்பு பிரம்மனின் சிருட்டி.
படைப்பின் அதிசயம் பிறப்பு.
பிறப்பு அற்புதச் சிறப்பு.
மறப்பு, துறப்பு நெருங்க
பிறப்புச் சிறகுகள் உதிரும்.
இறப்பு விருப்பின்றி வழியனுப்பும்.
வளமை நியதி பிறப்பு.
இளமை வனப்பு, வாளிப்புக்
களர, பிறப்பது முதுமை.
அழகின் பிறப்பு ரசனை.
அன்பின் பிறப்பு நம்பிக்கை.
பண்பின் பிறப்பு மனிதநேயம்.
பிறப்பு சிறப்பாக, வாழ்வு,
திறப்புத் தேடும் பறப்பு.
பிறக்கும் கவிதைத் தடம்
படமும் வரிகளுமாய் வார்ப்பில்.
பூவான வார்த்தைப் பிறப்பு
பொறுப்பான வாழ்க்கைச் சிறப்பு.
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-09-09.
பிறப்பில் அழுது
பின்னர் சிரிக்கும்
பிள்ளைக்குத் தெரிவதில்லை
பருவத்தில் அது
பிறருக்குக் கொடுக்கப்போவது
சிரிப்பா அழுகையா என்பது...!
செண்பக ஜெகதீசன்
அனைத்து
உயிர்களுக்கும்
கடவுள்
எழுதிய
வாழ்க்கை என்ற
கட்டுரையின்
முன்னுரையாய்...
பிறப்பு.
கி.சார்லஸ்
அகிம்சை எனும்
அன்பு வழியில்...
ஒரு மனிதன்
மகாத்மாவாகப் பிறந்தான்
எழுத்து எனும்
வேள்வி தீயில்
இன்னொரு மனிதன்
மகாகவியாகப் பிறந்தான்
இப்படியாக
எத்தனையோபேர்
மனிதர்களாக தோன்றி
அறிஞர்கள்... ஞானிகளாக
பிறந்தார்கள்..!
ஆனால்
ஏன் பிறந்தோம்
என்றே தெரியாமல்...
தான்தோன்றிகளாக திரியும்
எத்தனையோ...
சொல்லிக்கொள்கிறது
தானும்
மனிதன் என்று
- பாரதிமோகன்
தமிழ்நாடு-இந்தியா
---------------
ஒரு விசயம்
தெரியாமலே
இருந்து விடுகிறது
பிறப்பு
என்ற சொல்லுக்குள்ளேயே
இறப்பும்
இருக்கிறது
என்பது.
- இளைய அப்துல்லாஹ்
பெண்ணுக்கு ஆண்டவன் கொடுத்தவரம்
தாய்மை பிறப்பின் அடையாளம்
பெண்ணே பெண்களாய்ப் பிறந்துவிட்டால்
உலகம் உன்னை வெறுப்பது ஏனோ
உன்னை கள்ளிப் பால் கொட்டு கொல்லுவது ஏனோ
எத்தனை எத்தனை பிறப்புகள்! இருத்தாலும்
மனிதபிறப்பு போல வருமா
நாங்கள் குழந்தையாய்
பிறக்க போகும் இடம்
யாரும் அறிவதில்லை
- பிரபா (france)
எத்தனையோ கோடி
உயிரணுக்களின் ஓட்டப்பந்தயத்தில்
முதலாவதாக வந்து தொட்டேன்
கருக்கோட்டை!
பத்து மாதங்கள் கழித்து
இவ்வுலகில் கால் வைத்தேன்
ஊரார் சொல்கிறார்கள்
"ஊனமானவனாம் நான்!"
அ. விஜயபாரதி
கோவை, தமிழ் நாடு
அலறல் சத்தம் கேட்டு
மந்திகை ஆசுப்பத்திரி
ஸ்தம்பித்துப் போனது
தங்கத்துக்கொரு தங்கம்
பிறந்ததென்று
ஊருக்குள் காட்டுத்தீ பரவியது
ஆறு பெட்டைக்கொரு பெடியனெண்டு
அம்மா கர்வமாய்ச் சிரிப்பது
என் காதுகளிலேயே கேட்டது
நிர்வாணி
பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும்
இறப்பு வழவில் ஒருமுறைதான்
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில்
சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா
வெறுப்பா மற்றவர நமைநோக்க-பெரும்
வேதனை வந்து நமைதாக்க
எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
இதயம் வாழ்த்த புனிதர்களாய்
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதில திகழ ஞாலத்தே
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை
மரணம நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் அனைவரும ஓடிவர
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்க பண்ணிரேல்
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும நீலையாகும
புலவர் சா இராமாநுசம்
சென்னை-24
அன்னை முகமெங்கே அவள்கரமா நீதூங்க
சின்ன மலரேயென் செந்தமிழே நானேங்க
உன்னை நான்பாட உவகை எனைநாட
பொன்னின் பொலிவேநீ பொருளின் நயமேநீ
கன்னல் சாறேநீ கவிதைச் சுவையேநீ
மின்னல் நேரம்தான் மெள்ள கண்திறவாய்
என்னை மறந்தேநான எழுதிடுவேன் எழுவாயா
இன்னல் தரமாட்டாய் ஏனென்றால் நீகுழந்தை
புலவர் சா இராமாநுசம்
அரங்கராபுரம் சென்னை 24
ஒவ்வொரு நாளும்...
உன் ஒவ்வொரு அசைவையும் ரசித்தவள் நான்..
குழந்தை என்ற வார்தை அலகாகும் உன்னை பற்றி பேசும் போது...
நீ பிறந்ததும் என் வாழ்க்கை அர்த்தப்படும்...
உன்னோடு நான் வாழும் நாட்கள் சொர்க்கமாகும்....
உன் சிரிப்பு சத்தம் கேட்க ஏங்கும் என் உள்ளம்....
-செல்வி,இந்தியா - தமிழ்நாடு- மதுரை
