பச்சை மரமெல்லாம்
பட்டுப்போகப் பொசுக்கியதும்,
பாதையெல்லாம்
பிணக்காடாய் ஆக்கியதும்,
விடுதலை வேட்கையை
முள்
வேலிக்குள் முடக்கியதும்,
விளைநிலங்களை
விழுங்குழிகளாய் ஆக்கியதும்,
மனிதாபிமானத்தை மறந்த
மனிதர்களைக் காட்டியதும்,
இவ்வருடம் விட்டுச்சென்ற
இழி வரலாற்றுச்சுவடுகள்...
இனிவரும் வருடத்திலாவது
இது மாறுமா...!
செண்பக ஜெகதீசன்...
எவ்வளவினிய வன்னி இராச்சியம்!
இவ்வருடமெமை விட்டுச் சென்றது!
திவ்விய பலரினிய வாழ்வும்
செவ்விய கலாச்சாரக் கட்டுப்பாடும் சீரழிந்தது.
போரிழப்பு, கொலை, வன்புணர்ச்சியால்
பௌத்த சிங்களமயமாக்கும் பயங்கரத்தால்
மௌனித்தார் தாய்நிலத் தமிழர் - எம்
கௌரவம் இவ்வருடம் விட்டுச் சென்றது.
புல்லின் கீழ்பாம்புகளும் படமெடுக்கும்
பூனையில்லா எலிகளின் கொட்டமென
நிணவாடை நாடாகுமோ எம்நாடு?
இவ்வருடம் விட்டுச் சென்றது எம் கனவுகளின் கலைப்பு....
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-12-2009.
வருடங்கள் விட்டுச் சென்ற
சந்தோஷங்களைவிட
துயரங்கள் தான் அதிகம்
இல்லை.......
மனிதனின் வாழ்வில்
துயரங்கள்தான்
நிறைந்ததாகுமோ?
எதுவாயினும்
இவ்வருடத்தின்
ஈடுசெய்யப்படா
இழப்புக்களில் இருந்து
விடுபட்டு
தெளிவான ஒரு பாதைதனில்
கால்பதிப்போம்!
எதிக்கா கனடா
இன்னும் வாழ்வில்
செழிப்பு இல்லை
இதயத் தெருவில்
இன்பமில்லை
கண்கள் எட்டும்
தூரம் மட்டும்
கவலைக் கோடுகள்
நீளும் வாழ்வில்
இவ்வருடம் விட்டுச்சென்ற
இதய வலியை
எழுத்தில் சொல்ல
வார்த்தை இல்லை.
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.
இது விரோதி வருடம்
2009 மே 18 ஆம் திகதி
தமிழினத்தை அழித்து இந்தியாவும் இலங்கையும்
அந்தரிக்க செய்தது.
மாவீரர் தின உரைக்கு பிரபாகரன் வராதது
ஜனாதிபதியாக சரத் நிற்பது.
கரியமில வாயுவை
இன்னும் அதிகமாக விடுவோம்
என்று அமெரிக்காவும் பிரிட்டனும்
அடம் பிடிப்பது.
ஆப்கான் முஸ்லிம் மக்களை கொல்வதற்கு சமாதான நோபல் பரிசு வாங்கின ஒபாமா 30 ஆயிரம் இராணுவக் கொடூரங்களை அனுப்பியது.
தனித்தெலுங்கானா பிரிந்து போனது
ராஜ் தாக்கரே வென்றது
பிரதீபா பட்டீல் போர் விமானத்தில்
பறந்தது.
இத்தாலி பிரதமர் பேர்லுஸ்கோனியின்
பல்லை உடைத்தது.
மர்லின் மன்றோவின் கஞ்சா புகைத்த
வீடியோ வந்தது.
காந்தியின் மூக்கு கண்ணாடி ஏலம் விட்டது.
ஸ்டன்ஸ்டட் எயாபோட்டில் முஸ்லிம் பெயரோடு நான் போனதற்காக 3 மணித்தியாலம் என்னை நிற்கவைத்து கேள்வி கேட்ட ஒரு கிறிஸ்த்தவனின் கோர முகம் பார்த்தது.
ஒரு பாலுறவுக்கு இந்தியா வழிவிட்டது.
நான் கார் ஓடும் லைசன்ஸ் எடுத்தது.
அட போங்கடா! விரோதி வருடம் போயே போச்சு.
இளைய அப்துல்லாஹ்
இனிமுதலும்-
இனிமேலும்-
நல்லக்காலத்தின் தொடக்கம்....
ஜோசியர் சொன்ன
அருள் வாக்கில்
ஆசுவாசம்.
நேற்று -
நடந்து முடிந்தது
காதலீயின் திருமணம்.
இவ்வருடம் விட்டுச்சென்ற.......
சர் மதிநா,
துபாய்
07.12.2009.
வெற்றுக் கோசங்களின் ஆரவாரங்களுக்குள்ளே
மௌனத்தின் கொடிய புழுக்கங்களோடு
இலையுதிர்த்திக் கிடக்கிறது ஜீவிதம்.
எனினும்
மறைந்திருக்குமதன் வேர்மயிர்களோ
இன்னமும்
மண்ணைத் துழாவிக் கொண்டேயிருக்கிறது
தன் உயிர்ப்பிற்கான ஈரலிப்பை வேண்டியபடி.
கிண்ணியா எஸ்.பாயிஸா அலி
ஒரு பெருங் கொடுமை
நிகழ்த்திய
கொடூர வருடம். . .
இதற்கு
முன்னரும் சரி
பின்னரும் சரி
இப்படியொரு பழியை
எந்த ஆண்டும்
சுமந்ததுமில்லை
சுமக்கப்போவதுமில்லை.
நரித்தனமான நாடுகளின்
நயவஞ்சக சூழ்ச்சியால்
உதிர்ந்திருப்பது
உயிர்கள் எனும்
இலைகள் மட்டுமே!
உணர்வு வேர்களும்
நம்பிக்கை கிளைகளும்
இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
புதுவைப்பிரபா
ஆண்டின் கடைசி நாள்
திரும்பிப்பார்க்கிறேன்...
நாட்குறிப்பேடையும்
குறிப்பிட்ட நாட்களையும்
நம்பிக்கையோடு
தொடங்கிய வருடம்...
கனவுகளோடும்
லட்சியங்களோடும்
பயணித்தாலும்...
ஏமாற்றங்களையும்
இழப்புகளையும்
பரிசளித்து..
உயிர் விட்டு
உறைந்து போன -அந்த
சில பொழுதுகள் மட்டுமே
நிறைந்திருக்கிறது
நினைவுகளில்...
வரலாற்றில் எழுதுவதற்கான
வெற்றிகளும் உண்டிங்கு..
ஆனாலும்
சில தோல்விகளின் வலியும்
துயரங்களின் பாரமும்..
நாளைய பொழுதுகளை
வழி நடத்துமென்றே
மீண்டும்
தூக்கி சுமக்கிறோம்..
பாரதிமோகன்
சென்னை
இந்தியா
இருப்பிழக்கும் நிலையென்றால் கருவில் நீ அழிந்து போ
யுத்தப் பிரளயத்தில்
ஆதி இனமொன்று சிதறடிக்கப்பட்டிருக்கிறது
இனத்தின் முகம் கிழித்து
துயரங்களால் வேலியிட்டு
இருப்பு சூனியமாக்கப்பட்டிருக்கிறது
ஆண்டுகள் பிறக்கின்றன கழிகின்றன
தமிழினம் இறந்துகொண்டிருக்கிறது
2010 உதயமாகிறது...
மாண்டுபோன இனத்தின் கபாலங்களில்
பிரகடனங்கள் தொங்க விடப்படும்
துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும்
பொல்லாத பாசிசங்களுக்கு
வல்ல பாசிசங்கள்
தங்களது சமாதானக் கரங்களால்
மீண்டுமொரு தடவை
பரிசளிக்கக்கூடும்
அப்போதெல்லாம்
எஞ்சிய பிணங்கள் குருதியால் நனைக்கப்படும்
புத்தாண்டே
இம்முறை ஏது கொணர்ந்தாய் எமக்கு?
மீண்டும்
துயிலறுந்த இரவு.....
துகிலறுக்கும் கொடுமை...
துயர் சூழ்ந்த வாழ்வு....
இருப்பிழக்கும் நிலையென்றால்
இப்போதே எங்கள் பிணங்களை
உனக்கு படையலிடுகின்றோம்
நீ
பிறக்க வேண்டாம்
கருவிலே அழிந்து போ.
