pothumada
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-03-15 00:00

போதுமடா சாமி

காதலில் நுழைந்து
கல்யாணமாகி
குழந்தை..
வீடு வாசல்..
தோட்டம் துரவு...
இப்படியே
எல்லைகள் இல்லாத
ஆசைகளோடு
நீண்டுகொண்டே போகிறது - என்
காலத்தின் அளவு
போதுமடா சாமி -
நிம்மதியைத் தொலைத்துவிட்ட
இந்த வாழ்க்கை!

ப்ரியா, கனடா

- ப்ரியா, கனடா, 2010-03-15
போதுமடா சாமி....

எனக்கு நீ நிழலாய் வருவாய்_என்று
பகல் இரவாய் காத்திருந்தேன்.
என் இன்பத்திலும் துன்பத்திலும் கை
கொடுப்பாய் என்று காத்திருந்தேன்.
நான் சாய்ந்து நிற்பதற்கு மரமாக நிப்பாய்
என்று காத்திருந்தேன்.
உன் கைகள் எனக்கு கைத்தடியாய் காலம்
முழுவதும் உதவும் என்று காத்திருந்தேன்.
உன் கால்கள் எனக்கு கதிரையாய் மாறும்
காலம் மட்டும் காத்திருப்போம்- என்று
காத்திருந்தேன்.
பெற்றவர்கள் எம் விருப்பத்திற்கு சம்மதிக்கும்
மட்டும் காத்திருந்தேன்.
தாய்,தந்தை இல்லா பிள்ளை நீ-உன்
மனம் நோக கதைக்க கூடாது என்று பல
வேளைகளில் மௌனித்து நின்றேன்.
நான் நினைத்து இருந்தது ஒன்றே ஒன்று -தான்
எதிர்காலத்திற்கு என் உறவுகளுக்குப் பதிலாய்
எனக்கு நீ தோழ் கொடுப்பாய் ..துணையாய் இருப்பாய் என்று
காத்திருந்தேன்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று சொல்வார்கள்
உனக்கோ அன்ரி சொல் மிக்க மந்திரமில்லை என்றாகிப் போச்சு.
போதுமடா சாமி நீ தந்து விட்டுபோன பரிசு-என்
உயிர் உள்ளவரை நீ தந்து விட்டுப் போன பரிசை மறக்க மாட்டேன்.
போதுமடா சாமி நீ தந்த பரிசு.

யாயினி ,கனடா.

- யாயினி ,கனடா., 2010-03-18
போதுமடா சாமி

சாமியினைத் தேடி
சாமி யாரெனத் தெரியாமல்
சாமியாரிடம் வீழ்வோம் !
போதுமடா சாமி !
தன்னையே சாமியாய்
சொல்பவர் சாமியார்;
தன்னுள் தெய்வத்தை
உணர்பவன் சாமியே!
இது-
புரிந்தால் தெரியும்
சாமி யாரென்று !

அரவிந்த் சந்திரா

- அரவிந்த் சந்திரா, 2010-03-19
போதுமடா சாமி!...

சாது போல முடிவாக
போதுமென்று எதற்கு
பொறுமை காக்க வேண்டும்!
போதாது போதாது என்று
ஏதேனும் முயற்சியைத்
தோதாகத் தொடர வேண்டும்.

''கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்''
கூறியுள்ளார் யேசுநாதர்.
ஆறி அடங்குதல் போல்
போதுமடா சாமியென்று
போதாந்தம் கொள்ளுவதேன்!

போதுமடா சாமி வேண்டாம்.
ஏதுமொரு முனைவு வேண்டும்!
ஊதுங்கள் சங்கெடுத்து!
ஓதுங்கள் முயற்சியென்று!
விழவிழ எழுந்து மனிதன் விடியலைக் காணவேண்டும்!

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

- வேதா. இலங்காதிலகம்., 2010-03-20
போதுமடா சாமி..

சுயநலச்சகோதரர்கள்
உண்மை இல்லாத உறவுகள்
துரோகமிழைக்கும் நட்புகள்
தாந்தோன்றிப் பிள்ளைகள்
அரசியலில்.. அதிகாரத்தில் கொள்ளைகள்
சுற்றம் என்றும் சொந்தம் என்றும்
சுற்றிச் சூழ்ந்த முகமூடி மனிதர்கள்..
இவர்களுக்கு மத்தியில்..
போதுமடா சாமி
இந்த வாழ்க்கை

-பாரதிமோகன்

- பாரதிமோகன், 2010-04-01
போதுமடா சாமி

தாய் நாட்டு உணர்வு
வெறுமனே இருக்க
காலம் செல்கிறது
பலன் ஏதும் இல்லை

உறவுகளின் நிலைமை
விடிவு ஏதுமின்றி
அவலத்தில் தொடர்கின்றது

ஓய்வின்றி உழைத்தாலும்
மிஞ்சுவது ஏதோ
உலகப் பொருளாதாரம்
கடித்துக் கொள்கிறது

அநீதிகள்
சுரண்டல்கள்
போலிப் பேச்சுக்கள்
ஆட்சி புரிகின்றன

போதுமடா சாமி
இந்தப் போலி உலகம்

நீதியான உலகம்
வேண்டும் வாழ்வதற்கு

-அகணி, கனடா

- அகணி, கனடா, 2010-04-05
போதுமடா சாமி…

கொடுங்கோல்
கதிரவன் வெப்பம்..
குருதியாற்றில் குளியல்..
பசுமையைத் தேடிடும்
பரிதாப வாழ்க்கை..
போதுமடா சாமி-
போய்த்தொலைந்த சாமிகளுக்கெல்லாம்
பெரிய கும்பிடு…!

–செண்பக ஜெகதீசன்

- , 2010-04-11
போதுமடா சாமி

தாரிலே வெந்த கால்களையும் மீறி
தவிக்கும் சிசுவின் பசி
மனதினில்!!!
ஒரு கவளம் களியாவது
உண்டேழுந்தால் போதுமே,
பால் வார்த்து பசி தீர்பேனே!
கார்மேகம் கூட ஒரு மணித்துளி யோசிக்கும்
கரைந்தோடும் எண்ணமிருந்தால்!
நிழலில் கூட ஒதுங்க இயலா
நெஞ்சை உருக்கும் இவ்வாழ்க்கை
போதுமடா சாமி!!!

தேனு, இந்தியா

- தேனு, இந்தியா, 2011-01-08
போதுமடா சாமி....

போதுமடா சாமி-நாங்க
பொழைக்க வழி காமி
தீது மலிந்து போச்சே-இந்து
தேச மெங்கும ஆச்சே
சாதி சண்டை ஓங்க-நல்
சமத் துவமே நீங்க
பீதி போக நாங்க-நாளும்
பிழைக்க வழி தாங்க

ஊற்று போல ஊழல்-இங்கே
ஊறி வரும் சூழல்
மாற்ற வேண்டும் சாமி-உடன்
மாற்ற வாரும் பூமி
போற்று வோமே வந்தே-நீர்
பதுமை பலவும் தந்தே
ஆற்றும் உங்கள் பணியே-மேலும்
அழிக்க வேண்டும பிணியே

புலவர் சா இராமாநுசம்

- புலவர் சா இராமாநசம், 2011-02-22
போதுமடா சாமி

கொஞ்சம் கொஞ்சமாக
எல்லாம் மறந்து வருகிறது...
தமக்குள்ளேயான வட்டத்திற்குள்ளும்
வாழப் பழகிக்கொண்டார்கள்.
தேவைப்படும்போது
யாருடனும்,யார்
குடைக்குள்ளும்
ஒதுங்கிக்கொள்ளும்
பக்குவம் வந்திருக்கிறது.
அழைத்தால் வருகிறேன்
என
என்ன நிறம் அழைத்தாலும்
அழகு தான்.
வாழ ஏதாவது வேண்டும்
பணம்,புகழ்...
இத்தியாதி..இத்தியாதி..
போதுமடா சாமி..
உயிர்த்தெழல் எனி சாத்தியமில்லை.

-முல்லைஅமுதன்

- முல்லைஅமுதன், 2016-12-17

Share with others