தமிழ் இனி மெல்லச் சாகும்
-----------------------------------------
தமிழ் இனி மெல்லச் சாகும்
தமிழ்ப் புலவனின் கூற்றினை
தவறென புரிந்திடாதீர் தமிழர்காள்
தமிழ்ப் பாட்டனை உணர்ந்திடுவீர்
புலம் பெயரட்டும் நம் தமிழ் உறவுகள்
புதுக்கலைகள் பெருகட்டும் தமிழில்
புலரட்டும் புதுமையான தமிழ்ச் சமுதாயம்
புதுமைப் பெண்கள் தோன்றட்டும்
ஓடாத நதி, நீந்தாத மீன், பாயாத புலி
ஒருநாளும் காணாது வளர்ச்சியை
ஓதியதந்த உண்மையைத்தான் பாரதி
ஒருபோதும் தவறாகப் புரியாதீர்
தமிழைத் தன் உயிராகக் கொண்டவன்
தமிழுக்காய் தன்னையே தேய்த்தவன்
தமிழையே உணவாக புசித்தவன் - அவன்
தமிழை என்றாவது இகழ்வனோ ?
தமிழ்ப் பாவலன் பாரதி பா தனைப் படித்து
தமிழை மற்றொருவன் பழித்ததை
தாங்காமல் தமிழன்னை அழுவதாய் அவன்
தமிழாலே நம்மிடம் கலங்கினான்
தமிழ் இனி மெல்லச்சாகும் என்றந்தப் பேதை
தமிழை பழித்தான் ஆதலினால் என்
தமிழ்ச் செல்வங்கள் திக்கெட்டும் சென்று
தமிழ் வளர்க்கக் கலை கொண்டு வாருங்கள்
கற்பனை உலகில் தமிழன்னையின் கவலையை
கவிஞர்களின் தலைவன் பாரதி சொன்னான்
கருத்துக்களை கட்டிப்பிடித்து தமிழ் வளருங்கள்
கதைபேசி வீணாக காலத்தைக் கழியாமல்
- சக்தி சக்திதாசன்
