என்னைத் தொலைத்த(தொலைக்கும்) கணங்கள்
அந்த ஒரு கணத்தில்
அரசமரத்துக் கிளைதனில்
அன்றில் ஒன்று தாவிய
அழகு கண்டு நான்
அந்தக்கணம் எனைத்
தொலைப்பேன்
அழகுவிழி மலர் கொண்டு
அம்பொன்று என்மீது
அவளெய்த போதன்று
அரைவினாடிப் பொழுதினிலே
அவசரமாய் நான் எனைத்
தொலைத்தேன்
பூவிரியும் சோலையிலே
பூந்தென்றல் வீசுகையில்
பூவிலந்த வண்டமர்ந்து
பொழியுமந்தத் தேனருந்தும்
பொன்மாலையில் நான் என்னைத்
தொலைப்பேன்
கைநீட்டி காத்திருக்கும் சிறுவன்
கண்களிலே ஏக்கத்துடன்
கருணை எதிர்பார்க்கையில்
கண்மூடித்திறக்குமுன்னே அவன் கையில்
கச்சிதமாய் ஒரு நோட்டை
கைகளினால் கொடுக்கையிலே
கண்களை நம்பமுடியாமல் திகைத்து
காற்றாய் அவன் பறக்கும் வேளையில்
கண்நேரம் வாஞ்சையிலே நான் என்னைத்
தொலைத்தேன்
காற்றோடு காற்றாய் என் அன்னை
கலந்து விட்ட பின்னாலும்
கனவுலகில் சிலநேரம் காட்சியாகிக்
கதைபேசி என்னோடு சேர்ந்து
கவிதைகளை ரசித்திருக்கையில்
கனவு எனும் கானகத்தில் நான் என்னைத்
தொலைப்பேன்
காதலினால் என்னைக் கட்டிப்போட்டு
கலியாணம் என்னும் பந்தத்துள் அணைத்து
கருணைமிகு மனதோடு கட்டுண்டு
கடினமெனும் பாதையூடு கைபிடித்து
கவலைதீர்ந்த ஊருக்கு அழைத்துச் சென்ற
கண்மணி என் மனைவி தனை நினைக்கையில்
காலமெல்லாம் நான் எனைத்
தொலைப்பேன்
தமிழ் என்னும் கன்னியொருத்தி
தனைக்காட்டி எனை மயக்கி
தரணியிலே வாழுமட்டும் மறக்காமல்
தன்னோடு கலக்க வைத்து
தாகம் தீருமட்டும் கவிதையென்னும் நீரூற்றி
தகமதைத் தீர்க்கையிலெ நான் என்னைத்
தொலைப்பேன்
கண்ணதாசன் என்றொரு கவிஞனின்
கவிதையெனும் கானகத்தினுள்
கண்மூடி நான் நடந்து வேண்டுமென்றே
காணமல் வழிதொலைந்து
களைத்துக் கண்மூடும்வரை
கட்டாயமாக நான் என்னைத்
தொலைப்பேன்
அன்புதனை பயிரிட்டு
அன்பையே அறுவடை செய்து
அன்புடன் தமிழ் வளர்க்கும்
அன்புடன் குழுமத்துக்குள்
அன்புடனே நான் என்னைத்
தொலைப்பேன்
கருவினிலே உருவாகி என்
கைகளில் குழந்தையாய்
கண்களில் ஒளியாகி
கட்டிளம் காளையாக
கடமையுடன் கல்விகற்கும்
கண்ணான என் மகனின்
கவரும் அந்தப் புன்னகையில்
காற்றாகக் கலந்து நான் என்னைத்
தொலைப்பேன்
என்னைத் தொலைத்த கணங்கள் பல
என்னைத் தொலைக்கும் கணங்கள் பல்
எப்போதும் தொலைவதில் இன்பம்
என்றும் கொடுப்பது தமிழும் கவிதையும்
சக்தி சக்திதாசன்
