சுவாசம்
--------------
மீன் விற்கும் ஒருத்தியும்
பெருங்காயம் விற்கும் ஒருத்தியும்
ஒரே வீட்டில் இருந்தார்கள்
இவர்கள்
கண்ணயர்ந்தவேளையில்
சுவரில் சாய்ந்திருக்கும்
கூடைகள்
நூகர்தலுக்கு
இடம் வலம் ஏது?
கலந்தேயிருந்தன
வாசனையும் வீச்சமும்
ஆத்திரமோ அவசரமோ
நாள் ஒன்றில் மாறிப்போன
கூடைகளிருந்து கூடுதலாகவே
விற்றும் தீர்த்தன
சமைத்தவர்கள் வீடுகளிலிருந்து
கலந்தே வெளியேறுகிறது
நாசிகள் தேர்ந்தெடுத்து
கொள்கின்றன தேவையானவற்றை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-12-02 00:00
