காவேரி அக்கா
----------------------

யாரும் பார்க்கவில்லையென
எல்லோரும் பார்க்க
பக்கத்து வீட்டு
ஆறுமுகம் சாருடன்
கைகோர்த்து சுற்றிய
காவேரி அக்காவை
பார்த்து மகிழ்ந்தேன்.

அழுது அடம்பிடித்து
அடிவாங்கி விஷம்குடித்து
பிழைக்கவைத்து பயமுறுத்தி
பிடிக்காத மாமாவிற்கே
கட்டிவைத்த காவேரி அக்காவை
பார்த்து கலங்கினேன்.

தாலி ஏறிய நாளில்
கேலியும் கிண்டலும்
சிரித்தபடி இருந்த
காவேரி அக்காவை
பார்த்து வியந்தேன்.

பின் 'மாசமாகி' வந்து
பிள்ளையும் பெற்ற
காவேரி அக்காவை
பார்த்து யோசித்தேன்.

குழந்தைக்கு
பால்மறக்கடித்த சிலநாட்களில்
அதே ஆறுமுகத்துடன்
ஓடிப்போன
அதே காவேரி அக்காவை
பார்த்து
என்ன செய்ய ....?

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-02-06 00:00
Share with others